Take a fresh look at your lifestyle.

அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ‘செரிமான மண்டல அறிவியல் மையம்’ வடபழனி – காவேரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது .

48

வடபழனி – காவேரி மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ‘செரிமான மண்டல அறிவியல் மையம்’ தொடக்கம்

இரைப்பை மற்றும் கல்லீரல் நோய்களுக்கு சான்று அடிப்படையிலான சிகிச்சைகளோடு நோய் தடுப்பு மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த தீர்வுகளையும் இம்மையம் வழங்கும்.
மக்கள் தொகையில் சுமார் 70% பேர் அமிலத்தன்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல் அல்லது செரிமானக் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர்; இருப்பினும் இவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே மருத்துவ உதவியை நாடுகின்றனர்.
சென்னை, 17 டிசம்பர் 2025: பல்துறை சிகிச்சையில் சென்னையின் முன்னணி மருத்துவமனையான வடபழனி காவேரி மருத்துவமனை, ‘காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் டைஜஸ்டிவ் சயின்சஸ்’ (செரிமான மண்டல அறிவியல் மையம்) எனும் பிரத்யேக சிகிச்சை பிரிவை தொடங்கியுள்ளது. இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் ஆதாரப்பூர்வமான சிகிச்சையை வழங்குவதோடு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வாழ்க்கை முறை சார்ந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இம்மையம் சிறப்பு கவனம் செலுத்தும்.

நிபுணத்துவம் வாய்ந்த இரையககுடலியல் மருத்துவர்கள் எண்டோஸ்கோபி நிபுணர்கள் மற்றும் செரிமான நலச் சிறப்பு நிபுணர்கள் குழு இம்மையத்தில் சிகிச்சை சேவைகளை வழங்கும். இங்கு கேஸ்ட்ரோஸ்கோபி, கொலோனோஸ்கோபி, பித்தநாளம் மற்றும் கணைய நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவும் ERCP மற்றும் நேரோ பேண்ட் இமேஜிங் போன்ற நவீன பரிசோதனைகளை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த மேம்பட்ட நவீன சாதனங்கள், இரைப்பை மற்றும் கல்லீரல் நோய்களுக்குத் துல்லியமான மற்றும் மிகக்குறைந்த ஊடுருவல் கொண்ட சிகிச்சைகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக வழங்குவதற்கு பெரிதும் உதவும்.

இந்திய மக்களில் கணிசமானோர் செரிமானப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் தொகையில் சுமார் 70% பேர் அமிலத்தன்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல் அல்லது செரிமானக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர், ஆனால் குறைவான நபர்களே மருத்துவ உதவியை நாடுகின்றனர். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல், முறையற்ற உணவு நேரங்கள், நாள்பட்ட மன அழுத்தம், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் போதுமான தூக்கமின்மை ஆகியவை இந்த கோளாறுகளுக்கு வழிவகுக்கின்றன. இளைஞர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே குடல் அழற்சி நோய் (IBD) மற்றும் குடல் செயல்பாட்டில் கோளாறுகள் அதிகரித்து வருகின்றன.

கவலை தரும் இந்தப் போக்குகளுக்குத் தீர்வுகாணும் வகையில், மருத்துவ இரைப்பையியல், மேம்பட்ட எண்டோஸ்கோபி, அறுவை சிகிச்சை இரைப்பையியல் மற்றும் கல்லீரல் மருத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகளை வழங்குகின்றன பல்துறை மருத்துவக் கட்டமைப்பு பிரிவாக ‘காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் டைஜஸ்டிவ் சயின்சஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும் செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “நிஜ உலக சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார சவால்களை எதிர்கொண்டு தீர்வு வழங்கும் நோக்கத்தோடு, சிறப்பு சிகிச்சை மையங்களையும், பிரிவுகளையும் உருவாக்குவதை காவேரி மருத்துவமனை குழுமம் தொடர்ந்து செய்து வருகிறது. மருத்துவ சிகிச்சையில் நிபுணத்துவத்துடன் நோய்த்தடுப்பு பராமரிப்பையும் இணைப்பதன் வழியாக செரிமானக் கோளாறுகளுடன் வாழும் நோயாளிகளின் சிகிச்சைத் தரத்தையும், வாழ்க்கை முறையையும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்,” என்றார்.

காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் டைஜஸ்டிவ் சயின்சஸ்-ன் இயக்குநரும், இரைப்பைகுடலியல் இடையீட்டு சிகிச்சையில் முதுநிலை நிபுணருமான டாக்டர் பாண்டுரங்கன் பாசுமணி கூறுகையில், “செரிமானக் கோளாறுகள் இப்போது தனிப்பட்ட மருத்துவப் பிரச்சனைகளாக தனித்துப் பார்க்கப்படுவதில்லை. அவை, மக்களின் பரந்த வாழ்க்கை முறை மற்றும் பொதுச் சுகாதார சவால்களைப் பிரதிபலிக்கின்றன. முன்கூட்டியே நோயறிதல், சான்று அடிப்படையிலான இடையீட்டு சிகிச்சை மற்றும் நீண்ட கால அடிப்படையில் நோய் மேலாண்மை ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அமைப்பு முறையை உருவாக்குவதே எமது குறிக்கோளாகும். மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை ஆகிய இரண்டு பரிமாணங்களிலும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சை பராமரிப்பை வழங்கும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மாறிவரும் நோய் முறைகள் குறித்து வடபழனி காவேரி மருத்துவமனையின் இரைப்பைகுடலியல் மருத்துவரும் மற்றும் எண்டோஸ்கோபி நிபுணருமான டாக்டர் டி.கே. ஆனந்த் பேசுகையில், “வாழ்க்கை முறை சார்ந்த அழுத்தங்கள் மற்றும் காலம் தாழ்த்தி தாமதமாக சிகிச்சைக்கு வருவதன் காரணமாக இளம் வயதினரிடையே இரைப்பை குடல் நோய்கள் அதிகரித்து வரும் போக்கை நாங்கள் காண்கிறோம். இன்றைய சூழலில் திறன்மிக்க செரிமான மண்டல சிகிச்சையானது, வெறுமனே நோய் அறிகுறிகளை நீக்குவதோடு நின்றுவிடாமல், நிலையான வாழ்க்கை முறை மாற்றம், நோய்த்தடுப்புக்கான பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும்,” என்று கூறினார்.

காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் டைஜஸ்டிவ் சயின்சஸ் மையத்தை தொடங்கியிருப்பதன் வழியாக, இந்தியாவில் மிகவும் பரவலாகக் காணப்படுகிற ஆனால் பெரும்பாலும் உரிய கவனம் செலுத்தப்படாத உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றான செரிமானக் கோளாறுகளுக்கு, கட்டமைக்கப்பட்ட மற்றும் நெறிமுறை சார்ந்த, சான்று அடிப்படையிலான சிகிச்சையை வழங்குவதில் வடபழனி காவேரி மருத்துவமனை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.