’சத்திய சோதனை’ விமர்சனம்

நடிகர்கள் : பிரேம்ஜி, ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, சித்தன் மோகன், செல்வமுருகன், ஹரிதா, பாரதி
இசை : ரகுராம்.எம்
ஒளிப்பதிவு : ஆர்.வி.சரண்
இயக்கம் : சுரேஷ் சங்கையா
தயாரிப்பு : சூப்பர் டாக்கீஸ் – சமீர் பரத் ராம்

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் நாயகன் பிரேம் ஜி, ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார். உடனே அந்த உடலை ஒரு ஓரமாக இழுத்து வைப்பவர், அந்த உடலில் இருக்கும் கைகடிகாரம், கைப்பேசி மற்றும் சிறிய தங்க சங்கிலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார். அதே சமயம், காவல் நிலையத்தில் சரணடையும் கொலையாளிகள், கொலை செய்யப்பட்டவர் ஏகப்பட்ட தங்க நகைகளை அணிந்திருந்ததாக சொல்கிறார்கள். இதனால், அப்பாவி பிரேம் ஜி மீது சந்தேகப்படும் காவல்துறை, மற்ற நகைகள் எங்கே? என்று கேட்டு அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்த இறுதியில் அந்த தங்க நகைகள் என்ன ஆனது? அப்பாவியான பிரேம் ஜி-யை சட்டம் என்ன செய்தது? என்பதை வயிறு வலிக்க சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.

காதல், டூயட் என்று கதாநாயகனாக நடித்தாலும் பிரதீப் என்ற அப்பாவித்தனமான இளைஞர் வேடத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார் பிரேம் ஜி. வெட்டுப்பட்டு இறந்து கிடப்பவரை பார்த்ததும் எந்தவித பதற்றமும் இன்றி, அந்த உடலை ஓரமாக இழுத்து வைத்துவிட்டு, அருகில் இருக்கும் பொருட்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் பிரேம் ஜி போன்ற ஒருவரை தற்போதைய காலக்கட்டத்தில் பார்ப்பது அபூர்வமானது என்றாலும், அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிகராக அல்லாமல் பிரதீப்பாக வாழ்ந்து கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார் பிரேம் ஜி.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்வயம் சித்தாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகள் என்று குறைவான வேலை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி கதைக்கும் அவருக்கும் எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லை.

காவலர்களாக நடித்திருக்கும் சித்தன் மோகன் மற்றும் செல்வ முருகன் இருவரும் படத்தின் மற்றொரு ஹீரோக்களாக படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்களுடைய முட்டாள்தனத்தால் காவல்துறை படும்பாடு சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது. குறிப்பாக இவர்களின் வசன உச்சரிப்பு மற்றும் இயல்பான நடிப்பு கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

நீதிபதியாக நடித்திருக்கும் கு.ஞானசம்பந்தம், உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல், தவறே செய்யாதவர்களை பிடித்து அவர்களிடம் வசூல் செய்யும் காவலர்களை கலாய்க்கும் விதமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

பிரேம் ஜி-யின் அக்காவாக நடித்திருக்கும் ரேஷ்மா, மாமாவாக நடித்திருக்கும் கர்ணராஜ், பெண் போலீஸாக நடித்திருக்கும் ஹரிதா, போலீஸ் இன்பார்மராக நடித்திருக்கும் ராஜேந்திரன், நீதிபதிக்கே உத்தரவு போடும் பாட்டி என அனைத்து நடிகர்களும் மிக எதார்த்தமாக நடித்து கவனம் பெறுகிறார்கள்.

கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ரகுராம்.எம்-ன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருப்பதோடு, பாடல் வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் வசனம் நிறைந்தவையாக இருந்தாலும், அதை தொய்வில்லாமல் தொகுத்திருக்கும் வெங்கட் ராஜனின் படத்தொகுப்பு கச்சிதம்.

எளியவருக்கு சட்டம் என்றுமே உதவாது, என்பதை பதிவு செய்யும் வகையில் எழுதி இயக்கியிருக்கும் சுரேஷ் சங்கையா, அதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.

படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதிக் காட்சி வரை ரசிகர்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சுரேஷ் சங்கையா, நடிகர்களை இயல்பாக நடிக்க வைத்து படத்தை ஜாலியாக ரசிக்க வைக்கிறார்.

படம் முழுவதும் நகைச்சுவையாக நகர்ந்தாலும், குற்றவாளிகளை விட நிரபராதிகளை தான் சட்டம் தண்டிக்கிறது என்ற கருத்து மிக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இரண்டு மணி நேரம் போவதே தெரியாதவாறு நகைச்சுவையில் நம்மை மூழ்கடிப்பதோடு, நல்ல மெசஜ் ஒன்றையும் சொல்லியிருக்கும் இந்த ‘சத்திய சோதனை’ படத்தை ஒரு முறை அல்ல பல முறை பார்த்தாலும் போராடிக்காது.

ரேட்டிங் 3.5/5

kollywood movie sathiya sothanaiprem gsathiya sothanai reviewtamil movie sathiya sothanai review
Comments (0)
Add Comment