இணைய தொடர்களுக்கு புதிய வடிவம் தரும் புஷ்கர் – காயத்ரி !!

*இணைய தொடர்களுக்கு புதிய வடிவம் தரும் புஷ்கர் – காயத்ரி !!*

*சுழல் மற்றும் வதந்தி முதல் எக்ஸாம் வரை: தமிழ் இணையத் தொடர் கதையாடலுக்கு புதிய முகம் கொடுக்கும் புஷ்கர் – காயத்ரி !!*

தமிழில் நீளமான கதையாடல்களில் தனித்துவமான படைப்பாற்றல் கொண்ட இயக்குநர் ஜோடியாக புஷ்கர் மற்றும் காயத்ரி உருவெடுத்துள்ளனர். பல்வேறு அடுக்குகள் நிறைந்த எழுத்து நடை மற்றும் முழுமையாக உயிர்ப்புடன் தோன்றும் கதைக்களம் தான் அவர்களின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகின்றன.

புஷ்கர் – காயத்ரியை வேறுபடுத்துவது, அவர்கள் உருவாக்கும் கதை உலகங்கள் மிகவும் இயல்பாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதுபோலவும் தோன்றினாலும், அதே நேரத்தில் வணிகரீதியான திரில்லர் அம்சங்களின் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் தக்க வைத்திருப்பதுதான். சிறிய நகரங்களின் இயல்பான பின்னணி, சிக்கலான மனித மனங்கள், மெதுவாக பரவும் மர்மங்கள் ஆகியவற்றின் மூலம், உள்ளூர் கதைகளும் உலகளாவிய தரத்தில் பேசக்கூடியவை என்பதை அவர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அந்த படைப்பாற்றல் பார்வை சுழல்: தி வோர்டெக்ஸ் சீசன் 1 மற்றும் 2, வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி, தற்போது எக்ஸாம் போன்ற படைப்புகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

தமிழ் OTT உலகில் முக்கியமான திருப்பமாக அமைந்தது சுழல்: தி வோர்டெக்ஸ். இரு சீசன்களும் அதன் ஆழமான கதையாடல், நம் மண் சார்ந்து வேரூன்றிய கதை பின்னணி, உணர்ச்சிபூர்வமான மர்மம் ஆகியவற்றுக்காக பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக இரண்டாம் சீசன், சமூக ரீதியாக சிக்கலான காளிபட்டணம் என்ற உலகத்தை மையமாகக் கொண்டு, ஒரு மரணம் முழு ஊரின் அமைதியையே சிதைக்கும் வகையில் நகரும் பரபரப்பான திரில்லராக உருவெடுத்தது. குடும்பம், தியாகம், பழிவாங்குதல், ஒழுக்கம் போன்ற கருக்கள் கலந்து, அந்த தொடர் ரகசியங்களும் மன அழுத்தங்களும் நிறைந்த உலகிற்குள் பார்வையாளர்களை இழுத்துச் சென்றது.

வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடரில் க்ரியேட்டிவ் புரடியூசர்களாக இருந்த புஷ்கர் – காயத்ரி, உணர்ச்சிகளும் மனித பார்வைகளும் மையமாக இருக்கும் அடுக்குகள் நிறைந்த கதையாடலை உருவாக்கி தந்துள்ளனர். “வதந்தி” என்ற தலைப்புக்கேற்றவாறு, அந்த தொடர் வெலோனி என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி பரவும் வதந்திகள், சந்தேகங்கள் மற்றும் மாறுபட்ட உண்மைகள் குறித்து பேசுகிறது. உண்மையையும் பொய்யையும் பிரிக்க போராடும் காவல்துறை அதிகாரி விவேக், அந்த கதையின் மையமாக இருந்தார். ஒரு சிறிய நகரத்தின் இயல்பான பின்னணியில் நகரும் இந்த தொடர் மூலம், உணர்ச்சிகள் நிரம்பிய நீளமான கதையாடல்களை உருவாக்கும் தங்களின் திறனை இந்த படைப்பாளிகள் மீண்டும் நிரூபித்தனர்.

அதேபோல், எக்ஸாம் தொடரிலும் புஷ்கர் – காயத்ரி தங்களின் படைப்பாற்றல் பார்வையை தொடர்கிறார்கள். நுழைவுத் தேர்வுகளைச் சுற்றியுள்ள கடுமையான போட்டி மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள ஊழலை மையமாகக் கொண்ட இந்த தொடர், பெரிய மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயலும் ஜான்சி மற்றும் அவரது வழிகாட்டியான ஜெயச்சந்திரன் ஆகியோரின் பயணத்தை பின்தொடர்கிறது. அதே நேரத்தில் DSP மரமல்லியும் இந்த பதற்றமான சம்பவங்களின் முக்கிய அங்கமாக மாறுகிறார். பரபரப்பு, உணர்ச்சி ஆழம் மற்றும் சமூக முக்கியத்துவம் ஆகியவற்றை இணைக்கும் கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர்கள், இந்த தொடரின் மூலமும் தங்களின் நீளமான கதையாடல் பார்வையை மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வதந்தி சீசன் 2-ஐ எதிர்நோக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது. சுழல், வதந்தி மற்றும் தற்போது எக்ஸாம் ஆகியவை அனைத்தும் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில், புஷ்கர் – காயத்ரி தொடர்ந்து நம் மண்ணில் வேரூன்றிய, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் பரந்த ரசிகர்கள் விரும்பும் வகையிலான தமிழ் கதைகளுக்கு புதிய பரிமாணம் கொடுத்து வருகிறார்கள்.

Comments (0)
Add Comment