தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான ராஜ்கிரண், எம்.ஜி.ஆர் காலமான தினத்தில், அவரது அம்சத்தோடு பிறக்கும் தனது பேரன் கார்த்தியை, அவரைப் போலவே வளர்க்கிறார். ஆனால், கார்த்தி உடலால் எம்.ஜி.ஆர் ஆக இருந்தாலும், உள்ளத்தில் நம்பியார் குணம் கொண்டவராக வளர்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராகும் கார்த்தி, எதை எல்லாம் செய்யக்கூடாதோ அவை அனைத்தையும் செய்வதோடு, மிகப்பெரிய கார்ப்பரேட் மற்றும் அரசியல் இடைத்தரகரான சத்யராஜுடன் இணைந்து மக்களுக்காக போராடுபவர்களை அழிக்கும் பணியிலும் ஈடுபடுகிறார்.
எம்.ஜி.ஆர் அம்சம் கொண்ட கார்த்தி, அவரது வழியில் பயணிக்காமல் எதிர்மறையாக பயணிப்பது ராஜ்கிரணுக்கு தெரிந்ததும், மனம் வருந்தி இறந்து விடுகிறார். தாத்தாவின் இறப்பினால் மனதளவில் பாதிக்கப்படும் கார்த்தியின் உடலில் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது ?, என்பதை ஃபேண்டஸியாகவும், கலகலப்பாகவும் சொல்வதே ‘வா வாத்தியார்’.ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றும் சூப்பர் மேன்கள் கற்பனை உருவங்களாக இருக்கும் நிலையில், மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கும் மறைந்த நடிகர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்-யையே ஒரு சூப்பர் ஹீரோவாக சித்தரித்திருக்கும் இயக்குநர் நலன் குமாரசாமி, அதை ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை பாணியில் சொன்னாலும், தமிழகத்தில் நடந்த கசப்பான சம்பவத்தை திரைக்கதையின் முக்கிய அம்சமாக சொல்லி கவனம் ஈர்த்து விடுகிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக கையாண்டு ரசிக்க வைக்கும் கார்த்தி, இரண்டாம் பாதியில் ஏற்றுக்கொண்டிருக்கும் வேடம் சவாலானது என்றாலும், அதை மிக சிறப்பாக செய்து பார்வையாளர்களிடம் பாராட்டு பெறுகிறார். குறிப்பாக எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு கார்த்தியின் உடல் மொழி மற்றும் நடிப்பு எம்.ஜி.ஆர்-ஐ மீண்டும் பார்த்த உணர்வை கொடுக்கும்.