நாயகன் பிரித்திவிராஜ் தனது குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் மேனஜருடன் ஏற்பட்ட பிரச்சனையில் மேனேஜர் நாயகன் பிரித்திவிராஜை கன்னத்ததில் அறைந்து விடுகிறார்.
இதனையடுத்து அன்று இரவு வீட்டில் குடித்துவிட்டு வீட்டின் உரிமையாளர் தலையில் கல்லை கொண்டு அடித்து விடுகிறார். பிறகு தன்னுடன் கல்லூரியில் படித்த மைனா நந்தினியின் வீட்டிற்கு செல்பவர் அவர்கள் குடும்பத்தில் பிரச்சனையை செய்து விடுகிறார்.
பிறகு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துவிட்டு செல்பவர் அங்கு இருக்கும் மேம்பாலம் மீது ஏறி நின்று தற்கொலைக்கு முயற்சி செய்ய அங்கு வரும் இன்ஸ்பெக்டர் விஜய் முருகன் இவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறார்.
இதே வேளையில் 5 வயது குழந்தை காணாமல் போனதாக புகார் ஒன்று வருகிறது. அந்த புகார் குறித்து போலீஸ் விசாரிக்கும் வேளையில் நாயகன் பிரித்திவிராஜ் இன்ஸ்பெக்டர் விஜய் முருகனின் உடை மற்றும் வாக்கிடாக்கியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விடுகிறார்.
இறுதியில் நாயகன் பிரித்திவிராஜிடம் இருந்து உடை மற்றும் வாக்கிடாக்கியை போலீஸ் மைப்பற்றியாதா? இல்லையா? காணாமல் போன குழந்தையை போலீஸ் உயிருடன் மீட்டார்களா? இல்லையா? என்பதே “குட் டே” படத்தின் மீதிக்கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் பிரித்திவிராஜ் அறிமுக நடிகர் போல இல்லாமல் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். நிஜ குடிகாரர் போல நடை, பேச்சு , உடல்மொழி , காமெடி என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் கல்லூரி தோழியாக வரும் மைனா நந்தினி மற்றும் அவரது கணவராக வரும் ஆடுகளம் முருகதாஸ் இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இன்ஸ்பெக்டர் விஜய் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா சுப்பிரமணியம். ஆட்டோ டிரைவராக வரும் காளிவெங்கட் , பக்ஸ், வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளனர்.
மதன்குணதேவ் ஒளிப்பதிவு காட்சிகளில் கதையோடு நம்மை பயணிக்க வைக்கிறது.
இத்திரைப்படத்தை சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.