திருவரணார் எழுதிய ‘திருநெறியாறு’ நூல் வெளியீட்டு விழா !

“அட்ரஸ்” பட நடிகர், இணை தயாரிப்பாளர் திருவரணார் எழுதிய “திருநெறியாறு” நூலுக்கு ‘அட்றஸ்’ கொடுத்த, மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் திருமதி சோ.மதுமதி ஐஏஎஸ்.
சிறப்பு விருந்தினராக டைரக்டர் ராஜமோகன் கலந்துகொண்டார்.

எழுத்தாளர், நடிகர், இணை தயாரிப்பாளர் திருவரணார் எழுதிய ‘திருநெறியாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கிளார்க் பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்றதுடன் இந்த நூலை திருமதி சோ.மதுமதி ஐஏஎஸ் ( செயலர், மாற்றுத்திறனாளி நலத்துறை, தலைமை செயலகம் ) வெளியிட்டார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு பெ.குகன் கீதா இந்த நூலை பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் திரு தா.ஞானசீலன் உடற்கல்வி ஆசிரியர் நூலின் இரண்டாம் படியை பெற்றுக் கொண்டார். திரைப்பட இயக்குனர் திரு.ராஜமோகன் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில்

திருமதி சோ.மதுமதி ஐஏஎஸ் அவர்கள் பேசும்போது,

“இந்த புத்தகம் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மைல்கல். இதை வள்ளுவம் போல பழ மொழிகளில் உலகம் முழுக்க இதைக் கொண்டு சென்று மக்கள் அனைவரும் இதை புரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என இங்கு பேசியவர்கள் எல்லோரும் கூறினார்கள். ஆனால் எத்தனை பேர் இதை முழுதாக படித்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளர் என்பவன் அந்தந்த நேரத்திலே அவருடைய மனதிலே எழுகின்ற சிந்தனைகளை, அல்லது அவனது வாழ்க்கையிலே பயணப்பட்ட காலத்திலே ஏற்பட்ட காயங்களை, அவன் பார்த்தவர்களினால் அவன் பாதிப்படைந்ததை எல்லாம் இட்டுச்சென்று ஒன்றாக சேர்த்து அதை கோர்த்து தான் உருவாக்கியிருக்கிறார்.

நம்முடைய அனுபவம் என்பது தான் நமது படைப்பின் அடிப்படை.. அப்படி திருவரணாரின் அனுபவங்கள் இங்கே சிதறி கிடைக்கின்றது. இந்த புத்தகத்திற்கு உள்ளே இப்படி சிதறி கிடக்கின்ற முத்துக்களை எல்லாம் தனித்தனியாக கோர்க்க வேண்டும். இதில் இருக்கக்கூடிய அத்தனை பாடல்களும் அற்புதமானவை தான். ஆனால் திருக்குறளில் எப்படி முப்பாலாக பிரித்து இருக்கிறார்களோ அதேபோல இதையும் ஊக்குவிக்கும் பாடல்கள் தனி, தத்துவ பாடல்கள் தனி என பகுத்து தொகுப்பாக மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும், அப்போதுதான் படைப்பாளி என்ன சொல்ல வருகின்றார் என படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். புரிந்து கொள்வதற்கு நன்றாகவும் இருக்கும்.

இந்த புத்தகத்தில் பல பாடல்களில் நெகிழ்ந்து என்கிற வார்த்தையை நீங்கள் அதிகம் பயன்படுத்தி இருப்பதால் உங்களது வாழ்க்கையில் பல நெகிழ்ச்சியான சம்பவங்களை பார்த்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இந்த புத்தகத்தை ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். இதை சரியாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதுதான் இன்று நம் முன் இருக்கிற மிகப்பெரிய சவால். எந்த ஒரு விஷயத்தையும் ஒரேயடியாக மொத்தமாக கொடுக்காமல் இந்த தொகுப்புகளை தனித்தனி பாகங்களாக வெளியிட்டால் மக்களிடம் இன்னும் எளிதாக சென்று சேரும். இத்னுடைய பொருளையும் அவர்கள் உணர்ந்து புரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும்.

அது மட்டுமல்ல, எல்லோராலும் இதில் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியாது. அதனால் நிச்சயமாக இதற்கு ஒரு விளக்க உரை வெளியிட்டால் நன்றாக இருக்கும். சொல்லப்போனால் மிக மிக அவசியம். உண்மையிலேயே இது ஒரு பெரும் முயற்சி. இந்த புத்தகத்தை கொண்டு வந்ததை ஒரு தவம் என்றே சொல்ல வேண்டும். இந்த புத்தகத்தை முழுதாக படித்து அதில் நம் வாழ்விற்கு பொருந்துகின்ற தேவையானவற்றை எடுத்துக்கொண்டு அதன்படி நடப்பது தான் இந்த புத்தகத்திற்கு செய்யும் நீதியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

இயக்குனர் ராஜமோகன் பேசும்போது,

“பத்து வருடத்திற்கு முன்பு திருவரணாரை சந்தித்து இருக்கிறேன். பொதுவாகவே டீன் ஏஜில் நாம் எல்லோருமே கவிதை எழுதி இருப்போ.ம் நாம் எல்லோரும் அதை கடந்து தான் வந்திருப்போம். ஓன்று காதல் கவிதையாக இருக்கும். இல்லையென்றால் சமூகம் சார்ந்து இருக்கும். ஆனால் இது போல ஒரு திருக்குறள் வடிவில் கவிதை நயத்துடன் எழுதப்பட்டு இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். அவரை ஜாதி சம்பிரதாய சடங்குகளுக்குள் அடைத்து வைக்க முயற்சித்தார்கள். அதை எதிர்த்து நிறைய பிரச்சனைகளை எல்லாம் கடந்து தான் இந்த கவிதைகளை நூலாக்கி வெளியே கொண்டு வந்திருக்கிறார்.

பொதுவாகவே எழுத்தாளர்கள் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினை இதுதான். தன்னுடைய கருத்துக்களை ஆழமாக சொல்லும்போது, இது போன்ற ஆழமான பிரச்சனைகளை கடந்து தான் வருவார்கள். திருவரணாரும் அதற்கு விதிவிலக்கல்ல. அதை கடந்து தான் வந்திருக்கிறார். எல்லோருமே வாய்ப்புகள் கொடுப்பார்கள். ஒரு சிலர்தான் வாழ்க்கை கொடுப்பார்கள். அது போல தான் மதுமதி மேடம்.. தமிழுக்கும் ஒரு தமிழனுக்கும் சேர்த்து அவர்கள் வாய்ப்பும் வாழ்க்கையும் கொடுக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மரியாதைக்குரிய ஒரு பதவியை கொடுத்து அவரை கௌரவித்து இன்றும் சமூகத்தில் ஒரு மரியாதையாக நடத்துவதற்கான ஒரு விஷயத்தை செய்து கொடுத்தார்கள். அது திருவரணாருக்கு மட்டுமல்ல அவருடைய குரலுக்கும் சேர்த்து கிடைத்த பெருமை.

திருவரணாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, நான் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் “அட்றஸ்” என்கிற படத்தில் அவரை இணைத்துக் கொண்டேன். ஐந்து வருடங்களுக்கு முன்பே அவரை அழைத்து என் படத்தில் ஒரு பாட்டு எழுத சொன்னேன். புத்தக வேலைகள் காரணமாக வர மாட்டேன் என சொல்லிவிட்டார். ஆனால் இப்போது என் படத்தில் நடிக்கிறார். இணை தயாரிப்பாளராகவும் இணைந்து இருக்கிறார். சினிமா துறையில் மெதுவாக உள்ளே வந்து கொண்டிருக்கிறார். கண்டிப்பாக திரையுலகமும் இவரை ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறேன். எழுத்தாளருக்கு என ஒரு திமிர் இருக்கும். அதனால்தான் சினிமா வாய்ப்பு வந்தபோதும் கூட என்னுடைய நூல் வேலைகளை பார்க்கிறேன் என்று அவரால் திடமாக கூற முடிந்தது. அந்த திமிருடனே இன்னும் நிறைய எழுதி பெயரும் புகழும் அவர் பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்” என்றார்..

நூலாசிரியர் திருவரணார் பேசும்போது,

“அடிப்படையில் நான் படித்தது இயந்திரவியல் பட்டய படிப்பு. எனக்கும் தமிழுக்கும் எப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டது என்பதை என்னால் அறுதி இட்டு கூற முடியவில்லை படித்துப் பட்டம் பெற்று அரசு பணியில் சேர வேண்டும் என்பதுதான் என் தலையாய நோக்கமாக இருந்தது. ஐஏஎஸ் படிக்க விரும்பினேன். அது ஆனால் அது நடக்கவில்லை. அதனால் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இந்த நூலை வெளியிட வேண்டும் என விரும்பினேன். அதேபோல சாப்ட்வேர் துறையில் பணியாற்ற விரும்பினேன். அதுவும் முடியவில்லை. அதனால்யே சாப்ட்வேர் துறையை சேர்ந்த ஒருவரையும் அழைத்து இந்த புத்தகத்தை வெளியிட விரும்பினேன்..

பொதுவாக வெண்பா என்பது கடினமானது. அதிலும் அந்தாதி என்பது இன்னும் கடினம். தமிழிலேயே அள்ள அள்ள குறையாத சொற்கள் இருக்கும்போது பிற மொழியில் எதற்காக சென்று கடன் வாங்க வேண்டும். இப்படி பாடல்களை எழுத ஆரம்பிக்க காரணம் என் சகோதரி தான். அவள் படிக்கின்ற காலகட்டத்தில் என்னிடம் சில கட்டுரைகள் எழுதித் தரும்படி கேட்பாள். இந்த சமயத்தில் தான் கவிதை எனக்குள் அரும்ப தொடங்கியது. என் தங்கையும் கொஞ்சம் மொழி புலமை உள்ளவன். அவள் அதை திருத்த முயன்றாள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

என் நலன் விரும்பியான அண்ணாமலை என்பவர்தான் என்னுடைய பாடல்களை படித்துவிட்டு என்னை ஊக்குவித்தார். அறம், பொருள், இன்பம் என்கிற தலைப்பில் தனித்தனியாக எழுதும்படி கூறினார்கள். அப்படி ஒரு முயற்சியும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் மீது எந்த பிடிப்பும் பற்றும் இல்லாத எனக்கு தமிழ் மீது பிடிப்பும் பற்றும் வர காரணம் அதன் இயல்பு தன்மை. அதை போதித்த ஆசிரியர் குமாரசாமி.. அண்ணாமலை தான் என்னை குமாரசாமியிடம் கூட்டி சென்றார்.

ஒரு சில பெருமக்கள் பிஎச்டி பட்டம் எல்லாம் பெற்ற என்னாலேயே வெண்பா எழுத முடியவில்லை. உன்னால் எப்படி முடியும் என்று சந்தேகமாகவும் ஏளனமாகவும் கேட்டார்கள். அதனால் இயற்றுவதற்கு கடினமானது வெண்பா என்பதால் அதை மட்டுமே எழுத வேண்டும் என முடிவு செய்தேன். என் நலம் விரும்பி ஒருவர் நான் எதை எழுதி சென்றாலும், சொல்லோட்டம் இருக்கிறது பொருளோட்டம் இல்லை.. பொருளோட்டம் இருக்கின்றது சொல்லோட்டம் இல்லை என்று ஏதாவது சொல்வார். என்னதான் செய்வது என்று கேட்டால் திருக்குறளை படி என்று சொல்வார். நான் திருக்குறளை போலவே ஒரு நூலை எழுத போகிறேன் என்று சொன்னால் அதற்கும் என்னை திட்டினார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே 2000 குறள்களை எழுதிக்கொண்டு அவரிடம் கொடுத்தேன்..

ஆனால் என்னுடைய குருநாதர் அண்ணாமலை எப்போதும் சொல்வார், நீ 2000 குறள்கள் எழுதினாலும் பெருமை இல்லை. சினிமாவுக்கு போகணும் என்பார். இயக்குனர் ராஜமோகனும் என்னை உற்சாகப்படுத்துபவர்களில் ஒருவர். அவருடைய அட்ரஸ் படத்தில் நடித்துள்ளேன். இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறேன்.

அந்தாதி என்பது வடமொழித் தாக்கம் என்பார்கள்.. ஆனால் சங்க இலக்கியங்களில் அது இருக்கிறது. நான் எழுதிய குறள்களை இன்னும் கொஞ்சம் புரியும்படியாக மாற்றி எழுதலாம் என்கிற நினைப்பு வருகிறதே தவிர அதற்கு விளக்க உரை எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றவில்லை” என்று பேசினார்.

Comments (0)
Add Comment