Take a fresh look at your lifestyle.

தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் ‘காந்தாரா’

118

நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா’ தீபாவளிக்கு வெளியான நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களைக் கடந்து, 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்து வருகிறது.

‘கே ஜி எஃப்’ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் ‘காந்தாரா’ படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தீபாவளிக்கு வெளியான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்தவித பாதிப்பில்லாமல் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது. நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி உச்சகட்ட காட்சியில் உணர்வுபூர்வமாக நடித்திருக்கும் ‘காந்தாரா’ திரைப்படம், இன்றும் தமிழகம் முழுவதும் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்து வருகிறது என திரையுலகினர் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகமெங்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது என்பதும், கன்னடத்தில் வெளியான ‘கே ஜி எஃப் 2’ படத்தை பார்த்த பார்வையாளர்களை விட, ‘காந்தாரா’ படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.