Take a fresh look at your lifestyle.

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை!

9

*‘கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.*

சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும் பேசும் இந்தக் கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை கே. குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்கிறார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகும் இந்த திரைப்படம், தரமான படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் வலிமையால், இந்த திரைப்படம் தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மண்ணின் இயல்பான வாழ்க்கை முறையையும், அப்பா – மகன் உறவின் உணர்வுபூர்வமான தருணங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படம், ஜீவாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.